×

விமானத்தில் நடிகையிடம் சில்மிஷம் கேரள தொழிலதிபர் கைதாகிறார்

திருவனந்தபுரம்: விமான பயணத்தின்போது மலையாள நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது திருச்சூரை சேர்ந்த ஆன்டோ என்ற தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளது. அவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி கைது செய்ய கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர்.
லோக்பால், டேக் ஆஃப், தமாஷா, அறியிப்பு, வேட்டா, கம்மார சம்பவம் உள்பட ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளவர் திவ்ய பிரபா. தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து கொச்சிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்.

அப்போது அவரது அருகில் அமர்ந்திருந்த ஒருவர் குடிபோதையில் திவ்ய பிரபாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். தொடர்ந்து அவரை விமான ஊழியர்கள் வேறு இருக்கையில் அமர வைத்தனர். விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு அவர் கொச்சி போலீசுக்கு இமெயில் மூலம் புகார் அளித்தார்.

விமானத்தில் தன் அருகே அமர்ந்திருந்த ஒருவர் குடிபோதையில் தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டார் என்றும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நெடும்பாசேரி போலீசார் நேற்று நடிகை திவ்ய பிரபாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார்.

விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நடிகை திவ்ய பிரபா கூறினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகை திவ்ய பிரபாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சூரை சேர்ந்த தொழிலதிபரான ஆண்டோ என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். விசாரணை நடத்திய பிறகு அவரை போலீசார் கைது செய்ய தீர்மானித்து உள்ளனர்.

The post விமானத்தில் நடிகையிடம் சில்மிஷம் கேரள தொழிலதிபர் கைதாகிறார் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Thrissur ,Anto ,
× RELATED திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி